வாக்கு எண்ணிக்கை-காஞ்சியில் கௌடா சுவாமி தரிசனம்!
காஞ்சி: கர்நாடகா, தமிழக விஷச் சாராய பலிகளுக்கு கர்நாடக ஆளுநர் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கௌடா கூறினார்.
நாளை மறுதினம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு கௌடா வந்தார். அங்கு தரிசனம் செய்த பி்ன் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் அஹோபில ஜீயர் மடத்துக்கும் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் 191 உயிர்களை பலிவாங்கிய விஷச் சாராய சம்பவத்துக்கு தமிழகத்தை குறை சொல்ல முடியாது. இந்த சம்பவத்துக்குத் தற்போது கர்நாடக நிர்வாகத்தை கவனித்துவரும் ஆளுநர் தார்மீக பொறுப்பெற்க வேண்டும்.
எனது மகன் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி நடத்தியபோது கர்நாடகத்தில் சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டன. அப்போது ஒருமுறை கூட கள்ளச் சாராய சாவு ஏற்பட்டதில்லை.
எனவே இந்த துயரச் சம்பவத்துக்கு தற்போதைய நிர்வாகம் தான் காரணம். புதிய அரசு பொறுப்பேற்கும்வரை ஆளுநர் காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும்.
அதிகாரிகள் செய்த தவறினால்தான் இந்த சம்பவம் நடந்துவிட்டது. இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார்.
கர்நாடக தேர்தல் பற்றிய கேள்விகளுக்கு கௌடா பதிலளிக்க மறுத்துவி்ட்டார்.