மணல் ஏலம் விவகாரம்: 26ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை: மணல் குவாரிகளை தனியார்களுக்கு ஏலம் மற்றும் டெண்டர் மூலம் ஒப்படைக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது. வருகிற 26ம் தேதி இக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே கையகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மணல் குவாரிகளை ஏலம் விடவும், டெண்டர் விடவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் அளித்துள்ளது. ஜூலை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த முடிவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதை விட முக்கியமாக திமுக கூட்டணிக் கட்சிகளான பாமகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுதொடர்பாக விடுத்த அறிக்கைக்கு விளக்கம் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் சட்டசபைத் தலைவர்கள் கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆற்று மணல் எடுத்து விற்பனை செய்தல் தொடர்பாக அரசு பின்பற்ற வேண்டிய கொள்கை பற்றி கலந்து ஆலோசிப்பதற்காக தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் வரும் 26ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம், அமைச்சரவை அரங்கில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பிதழ் சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.