தேவர் படம் அவமதிப்பு-ஆண்டிப்பட்டி அருகே பதற்றம்
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் குமணன்தொழு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த தேவர் படம் அவமதிப்பு செய்யப்பட்டதால் அங்கு சாலை மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ளது குமணன் தொழு. இங்கு தேவரின அமைப்பின் சார்பில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையா தேவர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை சில விஷமிகள் அவமரியாதை செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் தேனி சாலையில் சாலை மறியலில் இறங்கினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடமலைக்குண்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பதட்டம் அதிகரித்தது. ஆயுதம்தாங்கிய போலீஸார் உடனடியாக சம்பவ பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
உயர் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசத்திற்கு முயன்றனர். அப்போது பொதுமக்கள் சார்பில் 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள சுடுகாட்டை இரு சமூகத்தினர் பொதுவாக பயன்படுத்துகின்றனர். அதை தனித் தனியாக பிரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் தேவர் படம் மீண்டும் புதிதாக வரையப்பட்டு அதற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு சகஜ நிலை திரும்பியது.