லெபனான் அரசியல் உடன்பாடு: ரஷ்யா வரவேற்பு
மாஸ்கோ: லெபனான் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாக அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது.
லெபனான் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளிடையே நேற்று கத்தார் தலைநகர் டோஹாவில் உடன்பாடு கையெழுத்தானது.
இதை ரஷ்யா வரவேற்றுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் போரிஸ் மலகோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தங்களை ரஷ்யா வரவேற்கிறது. உள்நாட்டு அரசியல் குழப்பத்திற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என ரஷ்யா நம்புகிறது.
அப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்பட இந்த ஒப்பந்தங்கள் வழி வகுக்கும்.
தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை களைந்து, லெபனான் அரசியல் தலைவர்கள் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. சுதந்திர, ஒருங்கிணைந்து லெபனானுக்கு இது முக்கியமானது.
லெபனானின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு வித்திடும் இந்த ஒப்பந்தங்கள் ஏற்பட லெபனான் தலைவர்களும், அரபு லீக் தலைவர்களும், கத்தார் தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்யா வரவேற்று பாராட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
லெபனான் தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி, புதிதாக உருவாக்கப்படவுள்ள தேசிய ஐக்கிய அரசில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications