'கொலை வெறி' மர்ம மனிதன்-கடலூர் அருகே பீதி
கடலூர்: கடலூரைச் சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 வாரமாக ஒரு மர்ம மனிதன் குறித்த பீதி வியாபித்து வியர்க்க வைத்து வருகிறது. இந்த மனிதன் தாக்கி இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடலூரைச் சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடந்த 2 வாரங்களாக இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர். காரணம், இந்தக் கிராமங்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் ஒரு மர்ம மனிதன் குறித்த தகவல்தான்.
இந்த மர்ம மனிதன் தாக்கி 2 பேர் கொல்லப்பட்டுள்ளனராம். பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்துள்ளனராம்.
இந்த மனிதன் நல்ல கட்டுமஸ்தான தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் பேசுவதாகவும் கூறப்படுகிறது. அரை நிஜார் போட்டபடி வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டும் இந்த மர்ம மனிதன் கிராமங்களைச் சுற்றி வருகிறானாம். கண்ணில் படுபவர்களைத் தாக்குவதாகவும் கிராம மக்கள் பீதியுடன் கூறுகின்றனர்.
இந்த மர்ம மனிதன் பீதியால் அனைத்துக் கிராமங்களில் இரவு நேர ரோந்துக்கு கிராம மக்களே ஏற்பாடு செய்துள்ளனர். கையில் உருட்டுக் கட்டை சகிதம் அவர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். சிலர் கத்தியையும் கையில் வைத்திருக்கிறார்கள்.
கிராம மக்களின் பீதியை அறிந்து வடக்கு சரக கால்துறை ஐஜி ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று கிராம மக்களைச் சந்தித்தார். அந்த மர்ம நபரைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மர்ம மனிதன் தாக்கி இறந்ததாக கூறப்படுவோரில் ஒருவரான ஆட்டோ டிரைவர் ரவி (30) என்பவர் கடந்த 9ம் தேதி கொத்தவஹேரி என்ற கிராமத்தில் கொலை செய்யப்பட்டார். இரும்புத் தடியால் அடித்து இவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல பாலசுப்ரமணியன் என்ற விவசாயி 2 நாட்கள் கழித்து இதேபோல இரும்புத் தடியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த இரண்டு கொலைகளையும் ஒரே நபர்தான் செய்திருப்பதாக போலீஸாரும், கிராம மக்களும் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்தே மர்ம மனிதன் குறித்த பீதி கிராம மக்களை வெகுவாக பயமுறுத்த ஆரம்பித்தது.
தனிமையில் இருக்கும் வீடுகள், முக்கியச் சாலைகளிலிருந்து வெகு தூரத்தில், உள்ளடங்கியிருக்கும் குக்கிராமங்களைத்தான் இந்த மர்ம மனிதன் தேர்வு செய்து அக்கிரமம் செய்து வருவதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.
மர்ம மனிதன் நடமாடுவதாக எழுந்துள்ள பீதியைத் தொடர்ந்து அமைச்சரும், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மேற்கண்ட கிராமங்களுக்குச் சென்று கிராம மக்களை தைரியமாகவும், பயமின்றியும் இருக்கும்படி ஆறுதல் கூறியுள்ளார்.
இருப்பினும் மர்ம மனிதன் பிடிபட்டால்தான் கிராம மக்களின் பீதி குறையும் போல உள்ளது.












Click it and Unblock the Notifications