மேட்டூர் அணையில் சாராய ஊறல்கள்!
சேலம்: மேட்டூர் அணையில் தண்ணீருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊறல்களை போலீஸார் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தனர்.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகள் மற்றும் பெங்களூரில் கள்ளச்சாராயத்திற்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இரு மாநிலங்களிலும் கள்ளச்சாராய வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
திருச்சி புறநகர்ப் பகுதிகளில் நடந்த கள்ளச்சாராய வேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் பிடிபட்டனர். ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மேட்டூர் அணை தண்ணீருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
காவிரிக் கரையையொட்டி உள்ள பண்ணவாடி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் 2 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராய வேட்டை நடந்தது. அந்த வேட்டையின்போது மேட்டூர் அணைத் தண்ணீருக்குள் ஏராளமான கள்ளச்சாராய ஊறல் பேரல்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விைரந்தனர். பரிசல் மூலம் அணைக்குச் சென்ற அவர்கள் அங்கு குறிப்பிட்ட இடத்தை சோதனையிட்டனர். அப்போது பெரிய பெரிய பேரல்களில் கள்ளச்சாராய ஊறல்கள் தண்ணீருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
நாயகன் படத்தில் வருவதைப் போல பெரிய பெரிய கல்லைப் போட்டுக் கட்டி அந்த பேரல்களை தண்ணீருக்குள் போட்டு வைத்திருந்தனர் கள்ளச்சாராய வியாபாரிகள்.
மொத்தம் 5 பேரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. அவற்றை போலீஸார் வெளியில் கொண்டு வந்து தீயிட்டு அழித்தனர். இதேபோல அணையின் பிற பகுதிகளிலும் பேரல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்று போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications