ஓகேனக்கல்-எதியூரப்பா ஒத்துழைப்பாரா-இல.கணேசன் பதில்
சென்னை: கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற்றதை தமிழக பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அக் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தலைவர் இல.கணேசன் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
அப்போது நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:
கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் விந்தியத்துக்கு தெற்கே முதல் முதலாக தாமரை மலர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக தனித்து நின்றே இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
பாஜகவின் கொள்கைகள், வாஜ்பாய் ஆட்சியின் சாதனைகள், குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும் கர்நாடகத்தில் எதியூரப்பாவின் சாதனைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதற்காக கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த தேர்தல் மூலம் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது நிரூபணமாகிவிட்டது.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாட்டில் தமிழக அரசால் நிறைவேற்ற வேண்டிய திட்டம். இதற்கு கர்நாடக அரசிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எதியூரப்பா முதல்வராக பதவி ஏற்கட்டும். அவர் மிகச் சிறந்த தேசியவாதி. இந்த திட்டம் நிறைவேற தமிழக பாரதீய ஜனதா முழு ஒத்துழைப்பும் அளிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications