புகையிலை பறிக்க சென்றவர் புலி தாக்கி பலி
உமாரியா (ம.பி.): காட்டில் புகையிலை பறித்துக் கொண்டிருந்த வாலிபரை பயங்கர புலியொன்று கடித்து கொன்றது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பந்தாவ்கர் தேசிய பூங்கா உள்ளது. புலிகள் சரணாலயமான இங்கு காட்டுப் பகுதியில் புகையிலை விளைந்துள்ளது.
பீடி சுற்றுவதற்காக இந்த புகையிலையை ராஜேஸ் பகாஸாரியா(17) என்ற வாலிபர் தனது பெற்றோருடன் நேற்று பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் அடர்ந்த மூங்கில் புதரில் மறைந்திருந்த புலி ஒன்று திடீரென்று அவர்களை தாக்கியது. இதில் ராஜேஸ் பகாஸாரியா வசமாக மாட்டிக் கொண்டார்.
அவரை பயங்கரமாக புலி கடித்து குதறியதில் அதே இடத்தில் பலியானார். ராஜேஸ் பெற்றோர் தப்பி விட்டனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தேசிய பூங்காவுக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்தியபிரதேச மாநில முதல்வர் ஷிவராஜ் சிங் சௌகான் பலியான ராஜேஸ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.