பஞ்சலிங்கம் அருவி வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பரிதாப சாவு
உடுமலைப்பேட்டை: கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலை, பஞ்சலிங்கம் அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலைப் பகுதியில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. இங்கு குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வந்திருந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. அருவியில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மாலை 3 மணியளவில் திடீரென தண்ணீர் வேகமாக வரத் தொடங்கியது. இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்தவர்கள், காட்டாற்று வெள்ளம் வருகிறது. குளிக்காதீர்கள், வந்து விடுங்கள் என எச்சரித்துள்ளனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில், திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. படு வேகமாக வந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதில் 15 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டனர். ஆனால் மற்ற 12 பேரும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கலாராணி, அன்னலட்சுமி உள்ளிட்ட நான்கு பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. பஞ்சலிங்க அருவி பகுதியில் உள்ள கோவிலுக்குப் பின்னபுறம் உள்ள மலை இடுக்குகளில் பல உடல்கள் சிக்கிக் கொண்டுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இறந்தவர்களில் அன்னலட்சுமி, கலாராணி, ஜெகன், ரமா, தாமரைச்செல்வன் மற்றும் ஜெகனின் மகன் ஆகியோர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள். கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது துரதிர்ஷ்டம் அவர்களை காவு வாங்கியுள்ளது. பிரகாஷ், பாபு, சண்முகம் ஆகியோர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். தங்கராஜ், சசி ஆகியோர் ராசிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொருவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
திருமூர்த்தி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வந்துள்ளது. நேற்றும் கூட மழை பெய்தது. இதையடுத்து அருவியில் யாரும் குளிக்க வேண்டாம் என கோவில் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
உள்ளூர்க்காரர்களும் எச்சரித்துள்ளனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள் பொருட்படுத்தாமல் குளித்ததால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டு விட்டது.