மணல் குவாரி ஏலம்-முடிவைக் கைவிட்டது அரசு

கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த ஆரம்பித்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட இந்த முறையே நீடித்தது.
இந் நிலையில் மணல் குவாரிகளை டென்டர்கள் மற்றும் ஏலம் மூலம் தனியாருக்கு விட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி சட்டமன்றத் தலைவர்கள் கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்தது.
இக்கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்தன.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், ஏலம் மற்றும் டென்டர் முறைக்கு மாறினால் பல்வேறு முறைகேடுகள் ஏற்படும் என்று தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், மணல் விற்பனை தொடர்பாக புதிய நெறிமுறைகளை, விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று கோரினார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் மணல் குவாரி முறையில் தற்போது உள்ள நடைமுறையையே தொடர்ந்து கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மணல் விற்பனையை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும். மணல் குவாரிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.
மேலும், மணல் விற்பனையில் நிலவும் முறைகேடுகளைக் களைவதற்காக பொதுப்பணித்துறை, நிதித்துறை, தொழில்துறை செயலாளர்களைக் கொண்ட குழு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
வெளி மாநிலங்களுக்கு மணல் விற்பனை செய்வதை நிறுத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications