கல்விவளர்ச்சிக்கு மத்தியஅரசு ரூ.34,000 கோடி ஒதுக்கீடு-வாசன் தகவல்
நாமக்கல்: நாட்டின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.34,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய புள்ளியல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், தோளூர்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது:
நாட்டில் கல்வித்தரம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.
1967ம் ஆண்டு நிலவரப்படி கல்வி அறிவு பெற்றவர்கள் மொத்தம் 18 சதவீதம் மட்டுமே. ஆனால் வரும் 2011ம் ஆண்டுக்குள் இந்தியா முழுகல்வி அறிவு பெற்ற நாடாகிவிடும். 100 சதவீத மக்களும் கல்வி அறிவு பெற்று விடுவார்கள்.
நாடுமுழுவதும் 2,379 பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 242 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. உலகில் பொறியியல் படிக்கும் மாணவர்களில் 28 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
நடப்பு நிதி ஆண்டில் கல்விக்காக மத்திய அரசு ரூ 34,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ 13 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்துக்கு ரூ 8,000 கோடி.
கடந்த நிதியாண்டில் 6 மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. நடப்பு நிதியாண்டில் மேலும் 16 மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.