வீட்டு கேஸ் இணைப்பு டெபாசிட் கடும் உயர்வு
டெல்லி: சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான டெபாசிட் தொகையில் திடீரென்று ரூ. 400 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இணைப்பு பெறுவோர் இனி, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 1,250 செலுத்த வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை கேஸ் இணைப்பு பெறுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.900 டெபாசிட்டாக செலுத்தினர். பின்னர் இந்தத் தொகை ரூ. 850 ஆகக் குறைக்கப்பட்டது.
தற்போது, சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான டிபாசிட் தொகை ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக கேஸ் இணைப்பு பெறுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.1,250 செலுத்த வேண்டும். இரண்டு சிலிண்டர்களுக்கு ரூ. 2,500 செலுத்த வேண்டும்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கான டெபாசிட் தொகையும் ரூ.500ல் இருந்து ரூ. 900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எல்.பி.ஜி., சிலிண்டர் உற்பத்திக்கு ஆகும் செலவோடு ஒப்பிடுகையில் இந்த டெபாசிட் தொகை, குறைவே. ஸ்டீல் விலை உயர்வால், சிலிண்டர்களால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்றார்.
கேஸ் சிலிண்டர் டெபாசிட் உயர்த்தப்பட்டது மட்டுமல்லாமல், சிலிண்டருக்கு பொருத்தப்படும் ரெகுலேட்டர்களின் விலையும் ரூ.100லிருந்து ரூ. 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications