பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 17 உயர்த்த திட்டம்?
டெல்லி: எண்ணெய் நிறுவனங்களின் பெரும் நஷ்டத்தை சமாளிக்க பெட்ரோல் விலையை லிட்டருக்கு 17 ரூபாய் அளவுக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், டீசல் விலை ஓரளவே உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 135 டாலராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கேற்ற வகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை பெருமளவுக்கு உயர்த்தாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தையும், பாதிப்பையும் சந்திக்க வேண்டி வரும் என அந்த நிறுவனங்கள், மத்திய பெட்ரோலியத்துறையை கேட்டுக் கொண்டன.
இதையடுத்து எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில், மத்திய அரசிடம் பெட்ரோலியத் துறை, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. அதில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், பெட்ரோல், டீசல் மீதான சுங்கத் தீர்வை வரியையும் குறைக்குமாறும் கேட்டுக் கொண்டது. ஆனால் இந்த மாற்றங்களுக்கு நிதி அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக சுங்கத் தீர்வையைக் குறைக்கவே முடியாது என நிதியமைச்சகம் கூறி விட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக பெட்ரோல் விலையை மேலும் உயர்த்த பெட்ரோலியத் துறை பரிந்துரைத்துள்ளது. அதன்படி லிட்டருக்கு ரூ. 17 வரை பெட்ரோல் விலையை உயர்த்தலாம் எனவும், அதேசமயம், டீசல் விலையை ரூ. 5 வரை உயரத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் எனவும் கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.