சிபிஐயிடம் போகும் தங்க காசு மோசடி வழக்கு
சென்னை: தமிழகத்தை உலுக்கியுள்ள தங்கக் காசு மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் கோல்டு குவெஸ்ட் நெட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் ஒரு முதலீட்டுத் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு முதலீடு செய்வோருக்கும், அந்தத் திட்டத்தில் மேலும் பலரை சேர்த்து விட்டால் அதற்கும் தங்கக் காசு பரிசாக அளிக்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்தது.
இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான நடிகர், நடிகையர் கேன்வாஸ் செய்தனர். இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நம்பி, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர், ஆட்களையும் பெருமளவில் சேர்த்து விட்டனர்.
ஆனால் சொன்னபடி இந்த நிறுவனம் தங்கக் காசு தரவில்லை. இதையடுத்து ஏமாந்து போன பொதுமக்கள் சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் களத்தில் இறங்கினர். நிறுவன நிர்வாக இயக்குநர் புஷ்பம் நாயுடு உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் நிறுவனத்தின் தலைவரான ராஜு ஈஸ்வரன் மட்டும் தலைமறைவாகி விட்டார். அவர் மலேசியா அல்லது சிங்கப்பூருக்குப் போய் விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களில் புஷ்பம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பத்தின் வங்கி லாக்கரிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று மட்டும் புஷ்பத்தின் மயிலாப்பூர் வங்கி லாக்கரிலிருந்து ரூ. ஒன்றே கால் கோடி பணத்தை போலீஸார் மீட்டனர். இதுவரை அவரது லாக்கரிலிருந்து நான்கே முக்கால் கோடி பணத்தை போலீஸார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலீஸார் முடக்கி வைத்துள்ளனர். இந்த நிறுவனம் சென்னை தவிர மதுரை, சேலம் உள்ளிட்ட பல ஊர்களிலும் இதுபோல தங்கக் காசுத் திட்டத்தை அறிவித்து பெரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் மட்டும் இந்த நிறுவனம் ரூ. 45 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 17 ஆயிரம் பேர் புகார் கொடுத்துள்ளனர்.
தமிழக நடிகர், நடிகையர் தவிர ஆந்திராவைச் சேர்ந்த நடிகர், நடிகையரும் கூட இந்த மோசடி நிறுவனத்திற்காக பிரசாரம் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் லீலைகள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருவதால், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். சிபிஐ விசாரணைதான் சரியானதாக இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முதலில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கலாம் என அரசு கருதியது. ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.