ஊனமுற்றோருக்கு சேவைப் பிரிவை தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சென்னை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உடல் ஊனமுற்றோர் சேவைப் பிரிவு சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இது செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊனமுற்றோரின் விமான பயணம் இலகுவாகவும், அவர்கள் எந்த சிரமமும் இன்றி பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேவைப் பிரிவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்காக சென்னையைச் சேர்ந்த வித்யா சாகர் (முன்பு இந்திய ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த பிரிவைத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொது மேலாளர் பூ சாய் வூ கூறுகையில், இந்தத் திட்டத்தின் கீழ், விமான நிலைய நுழைவாயிலில் இருந்து விமானத்தில் அமரும் வரை, ஊனமுற்ற பயணிகளுக்கு உதவ தனியாக ஆட்கள் நியமிக்கப்படுவர்.
மேலும், விமானத்தில் ஏற காத்திருப்போர் அமரும் பகுதியில், ஊனமுற்ற பயணிகளுக்கு என தனி வசதிகள் செய்யப்படும். மேலும் ஊனமுற்ற பயணிகளின் உடமைகளை விரைவில் பெறவும முன்னுரிமை தரப்படும்.
இதுதவிர விரைவில், ஊனமுற்றோருக்கு ஆதரவு காட்ட வேண்டும், உதவ வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விசேஷ விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றார் வூ.