காரியாபட்டி: அதிமுக கொடிக் கம்பத்தில் செருப்பு மாலை
அருப்புகோட்டை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அதிமுக கொடிக்க ம்பத்துக்கு மர்ம நபர்கள் செருப்பு தோரணம் அணிவித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரியாப்பட்டி அருகில் உள்ளது கல்குறிஞ்சி கிராமம். இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகில் அதிமுக கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது.
இந்த கொடிக் கம்பத்துக்கு மர்ம் ஆசாமிகள் சிலர் நேற்று செருப்பு மாலை அணிவித்துவிட்டு தப்பிவிட்டனர்.
இதைக் கண்டு அப்பகுதி அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜராஜன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து அருப்புக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிமுக நிர்வாகிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கொடி கம்பத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யுமாறு அதிமுகவினர் கோரினர்.
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்பு மறியலை கைவிட்டு அதிமுவினர் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மேலும் அந்த பகுதியில் கலவரம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.