கருணாநிதியுடன் அர்ஜூன் சிங் சந்திப்பு
சென்னை: மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் முதல்வர் கருணாநிதியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிற்பகல் 1 மணிக்கு சென்னைக்கு வந்த அர்ஜூன் சிங், ஆளுநர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலையில், கோபாலபுரம் இல்லம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மரியாைத நிமித்தமாகவே முதல்வர் கருணாநிதியை சந்தித்தேன். தேசியப் பிரச்சினைகள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதித்தோம்.
இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் என்ற அம்சம் தேவையில்லை, அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார். அதே கருத்தைத்தான் மத்திய அரசும் கொண்டுள்ளது என்று அவரிடம் தெரிவித்தேன்.
விலைவாசி உயர்வைக் குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார் அர்ஜூன் சிங்.
அர்ஜூன் சிங்கின் வருகை மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் கூட, அவர் ஒரு முக்கிய செய்தியுடன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருணாநிதியுடன், அர்ஜூன் சிங் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுரையின் பேரில்தான் அர்ஜூன் சிங் வந்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான மன நிலைக்கு காங்கிரஸ் கட்சி வந்துள்ளது. இதற்குக் காரணம், சமீப காலமாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
கர்நாடகத்தில் அதற்குக் கிடைத்துள்ள தோல்வி, கட்சி மேலிடத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே ஆட்சிக்காலம் முடியும் வரையில் காத்திருக்காமல் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் எப்படி இருக்கும் என்று காங்கிரஸ் யோசிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தலை எப்போது நடத்தினால் நலமாக இருக்கும் என்பது குறித்து கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக மூத்த தலைவரான கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தும் பொருட்டே அர்ஜூன் சிங் சென்னைக்கு வந்ததாக தெரிகிறது.
சமீபத்தில் சென்னை வந்து முதல்வரைச் சந்தித்த நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூட நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முதல்வருடன் முக்கிய விவாதம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications