காமராஜர் சிலை சேதம் - மதுரையில் பதட்டம்
மதுரை: மதுரையில் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உடனடியாக சேதம் சரி செய்யப்பட்டதால் அமைதி திரும்பியது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்துவதால் பெரும் கலவரம் ஏற்பட்டு விடுகிறது. சமீபத்தில் மதுரையில் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை மன நலம் பாதித்த ஒருவர் களங்கப்படுத்தியதால் பெரும் பிரச்சினை எழுந்து பின்னர் அமைதி திரும்பியது.
இந்த நிலையில் மதுரை திடீர் நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலையின் முகத்தை சில விஷமிகள் சேதப்படுத்தி விட்டனர். இது மார்பளவுச் சிலை ஆகும்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார், அந்த சிலையை வடித்த சிற்பியை வரவழைத்து சேதமடைந்த முகப் பகுதியை சரி செய்தனர். இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.
சிலையை சேதப்படுத்திய விஷமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications