வசுந்தராவுக்கு மிரட்டல்: சென்னையில் குஜ்ஜார் இளைஞர் கைது
சென்னை: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த குஜ்ஜார் இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவர், பழங்குடியினர் அந்தஸ்து கோரி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களின் போராட்டத்தால் ராஜஸ்தான் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இன்று டெல்லியை உலுக்கும் வகையில் மிகப் பெரிய போராட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் வட இந்தியா முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு 2 முறை செல்போனில் மிரட்டல் வந்தது. அதில் பேசிய நபர், எங்கள் இன மக்களின் சாவுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும். உங்களது போக்கு தொடர்ந்தால் உங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்ைல என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த எண் எங்கிருந்து வந்தது என்பதை பார்த்தபோது அது சென்னையிலிருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அலுவலக அதிகாரிகள், சென்னை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.
இதையடுத்த ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்களின் விசாரணையில் மின்ட் தெருவில் உள்ள போராராம் (24) என்பவர்தான் தொலைபேசியில் பேசி வசுந்தராவுக்கு மிரட்டல் விடுத்தது என்பது தெரிய வந்தது.
போராராம் திருவள்ளூரில் உள்ள அடகுக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் போராராமைக் கைது செய்தனர்.
போராராம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர். தனது இன மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் கோபத்தில் ராஜஸ்தான் முதல்வரை மிரட்டியதாக ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து ராஜஸ்தான் போலீஸாருக்கு சென்னையிலிருந்து தகவல் சென்றது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானிலிருந்து இன்ஸ்பெக்டர் சவானி சென்னை வந்துள்ளார். அவரிடம் போராராமை போலீஸார் ஒப்படைத்தனர். இன்று போராராமை போலீஸார் ராஜஸ்தான் கொண்டு செல்லவுள்ளனர்.












Click it and Unblock the Notifications