கோவில் குட்டி யானை சாவு- நிர்வாகம் மீது புகார்
குற்றாலம்: குற்றாலத்தை அடுத்துள்ள இலஞ்சி குமாரர் கோவிலின் குட்டி யானை மர்மமாக இறந்தது.
குற்றாலத்தை அடுத்த இலஞ்சி குமாரர் கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாகும்.
இந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு கடம்பூர் இளைய ஜாமின்தார் மாணிக்கராஜா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ரூ.40 லட்சம் செலவில் இரண்டு குட்டி யானைகளை வழங்கினர்.
இந்த யானைகளுக்கு வள்ளி, தெய்வானை என பெயர் சூட்டப்பட்டது.. யானைகளை பாரமரிப்பதற்காக ரூ. 13 லட்சத்திற்கு வங்கியில் டெபசிட் செய்திருந்தனர். இரண்டு யானைகளும் பக்தர்களையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில் இன்று காலை தெய்வானை திடீரென மயங்கி கீழே விழுந்து சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இதுகுறித்து கோயில் தரப்பில் கூறுகையில், நேற்றிரவு வரை இரண்டு யானைகளும் வழக்கம்போல் உணவருந்தின. இன்று காலை குளிப்பதற்காக பாகன் அழைத்து சென்றபோது வள்ளி மட்டும் உடன் சென்றது. தெய்வானை வர மறுத்துவிட்டது.
இதனால் தெய்வானையை பாகன் கட்டி போட்டார். சிறிது நேரத்தில் அது கீழே விழுந்து இறந்துவிட்டது. இதுகுறித்து கோயில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்லத்தை சேர்ந்த டாக்டர் மகேஸ்வரி தலைமையில் பிரேத பரிசோதனை நடந்த பிறகு யானை அடக்கம் செய்யப்படும் என்று கூறினார். இதற்கிடையே குட்டி யானைகளில் ஒன்று இறந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோயில் நிர்வாகம் மற்றும் பாகன்களின் பராமரிப்பு குறைவினாலும், உணவு பற்றாக்குறையினாலுமே யானை இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.