''தமிழ்நாட்டில் தீவிரவாதம் இல்லை, உருவாகும்போதே தடுக்கப்படுகிறது''
பழனி: கொடைக்கானல் மலைப் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடரும் என கூடுதல் டிஜி.பி. விஜயகுமார் கூறியுள்ளார்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14வது பட்டாலியன் முகாமில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் விஜயகுமார் பேசுகையில்,
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. கொடுத்த பணியை சிறப்பாக நிறைவேற்றி உள்ளீர்கள். அதிரடிப் படையினரின் பணி, நோக்கம், செல்வாக்கு, தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. தீவிரவாதிகளை தேடும் பணி தொடர வேண்டும். தப்பி ஓடியவர்களை தொடர்ந்து தேட வேண்டும்.
தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை சிறப்பாக செய்துமுடித்த அனைத்து பிரிவு போலீசாருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். ஒத்துழைப்பு கொடுத்த வனத்துறை அதிகாரிகள், மலைவாழ் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
கொடைக்கானல் மலைப் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடரும். தீவிரவாதிகளின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு துணி விற்பவர்கள் போன்றும், கடன் கொடுத்து விட்டு திருப்பி வாங்காதவர்கள் போன்றும் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டு மலைவாழ் மக்களது மனதை மாற்றி தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். ஆயுத இயக்கமாக மாறும் சமயத்தில் தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் தீவிரவாதம் இல்லை. உருவாகும்போதே அவை தடுக்கப்படுகின்றன என்றார்.