பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் தள்ளிவைப்பு
டெல்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்தே விலை உயர்வு குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
மத்திய பெட்ரோலியத் துறையும் கணிசமான அளவுக்கு விலையை உயர்த்தலாம என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதனால் விலை உயர்வு குறித்து கடந்த 2 வாரங்களாக, இப்போது, நாளை, நாளை மறு நாள் என தேதிகள் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. ஆனால் இதுவரை அரசு எந்த முடிவையம் அறிவிக்கவில்லை.
நேற்று விலை உயர்வு குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் நேற்று காங்கிரஸ் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்தது.
ஆனால் நேற்று பண வீக்க விகிதம் 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்திருந்தார். இந்த நிைலயில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தினால் அது விலைவாசி உயர்வுக்கு வித்திடும். இதனால் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என நிதித்துறை அஞ்சியது.
இந்த நிலையில் நேற்று எதிர்பார்க்கப்பட்டபடி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஒரு வாரம் கழித்தே இதுகுறித்து முடிவு எட்டப்படலாம் என பெட்ரோலியத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை 18.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆயிரம் லிட்டர் விமான பெட்ரோல் 69 ஆயிரத்து 227 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் விமான கட்டணங்கள் கிடுகிடுவென அதிகரிக்கும் எனத் தெரிகிறது.