'சேதுராம்' என பெயரிட்டே நிறைவேற்றலாம்-கருணாநிதி
நாளை (ஜூன் 03ம் தேதி) முதல்வர் கருணாநிதிக்கு நாளை 84 வயது முடிந்து 85வது வயது பிறக்கிறது.
இதையொட்டி, நாளை காலை அண்ணா நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெறுகிறார். அவரை நேரில் வாழ்த்துதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னையில் குவிய ஆரம்பித்துள்ளனர்.
நாளை இரவு சென்னை தீவுத் திடலில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே தனது பிறந்தநாளையொட்டி, கருணாநிதி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேது சமுத்திர திட்டத்தை தடுக்க வேண்டாம். அதற்கு சேது-ராம் திட்டம்' என்று பெயர் வைத்தாவது அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கவிதை வடிவிலான அந்த செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தினந்தோறும் ஒரு சாதனையாக செய்து முடிக்கிறோம். இனம் வாழ பல வழிகளில் முனைகிறோம்.
நிலம் வாழ நீர் இல்லாமல் பல நேரம் தவிக்கிறோம். இயற்கையின் கருணை இல்லாமல் போவதும், இருப்போர் (கர்நாடகம், கேரளம்) தர
மறுப்பதையும் உணர்ந்து சேமித்து வைக்கும் செயற்கையின் பயனை தமிழர் வளம் பெறவே திருப்புகிறோம்.
ஆனாலும் ஒரு கவலை. பெரியார்-அண்ணா-காமராஜர் கனவொன்று இன்னும் நிறைவேறாமல் இதயம் துடிக்கிறது.
செந்தமிழ் நாட்டில் செழிப்பு துள்ளவும், வாணிபம் பெருகி வளங்கள் சிறக்கவும் நமக்கு சேதுவை விட்டால் வேறு வழியில்லை. இந்தத் திட்டம் நமக்கு சரித்திரக் கட்டாயம்!
சூது நினைவால் அதையும் தடுத்திட முனையாமல் நாடு, மொழி வாழ நாளெல்லாம் உழைத்திட என் நடுங்கும் குரலுக்கு மதிப்பளித்து, இராமன் பெயர் கூறி திட்டத்தையே தீர்த்துக்கட்டி விடாமல் என் பிறந்தநாள் செய்தியாகவே வேண்டுகோள் ஒன்று விடுக்கிறேன்.
வேண்டுமானால்; சேது ராம்' திட்டமென்றே பெயரிடுக! வெறுப்பு விருப்பு கடந்து நாடு வாழ்வதற்கும் நலிவு தீர்வதற்கும் நான் தெரிவிக்கும் பிறந்தநாள் செய்தி இது!
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக பொதுக் குழுவிலும் தீர்மானம்:
மேலும் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக பொதுக் குழுவிலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதி்ல்,
150 ஆண்டுகள் தமிழர்களின் கனவாகயிருந்ததுமான சேது சமுத்திரத் திட்டத்தை; திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு; 2004ம் ஆண்டில் பொறுப்பேற்ற நடுவண் அரசு செயல்படுத்தத் தொடங்கியது.
திட்டப்பணிகள் இரண்டு ஆண்டு காலமாக விரைவாக நிறைவேறி வரும்போது, இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும் வழி வகுத்திடும் இந்தத் திட்டத்தை, ராமன் பெயர் கூறி திட்டத்தையே தீர்த்துக் கட்டி விடாமல் என் பிறந்த நாள் செய்தியாகவே வேண்டுகோள் ஒன்று விடுக்கின்றேன்.
வேண்டுமானால்; சேது ராம்' திட்டமென்றே பெயரிடுக! வெறுப்பு விருப்பு கடந்து நாடு வாழ்வதற்கும் நலிவு தீர்வதற்கும் நான் தெரிவிக்கும் பிறந்த நாள் செய்தி இது என்று தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் தமது பிறந்த நாள் செய்தியாகக் கேட்டுக் கொண்டதில் உள்ள உண்மையான உணர்வைப் புரிந்து கொண்டு, அத்திட்டத்தை நிறைவேற்றிட நடுவண் அரசை இப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.