'நான் அப்பாவி' என்கிறார் 'குறும்பு' ஜோசப்!
மலையாள டிவி நடிகையும், முன்னாள் செய்தி வாசிப்பாளருமான லட்சுமி கோபகுமார் சென்னையில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பயணித்தார்.
அப்போது அவருக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அப்போதைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப், லட்சுமியின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி குறும்பு செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கேரள அரசும் இதுகுறித்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் ஜோசப் பதவி விலகினார்.
இந்த நிலையில் இந்த வழக்கில், ஆலந்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் 27 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிக்கை நகலை நேரில் வந்து பெற்றுக் கொள்ளும்படி ஜோசப்புக்கு ஆலந்தூர் கோர்ட் உத்தரவிட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜோசப் ஆஜரானார்.
அப்போது நீதிபதி ராமநாதனிடம் அவர் கூறுகையில், நான் அப்பாவி. என் மீது அபாண்டமான புகாரை சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் என்றார்.
பின்னர் ஜோசப்பின் வக்கீல்கள், ஜோசப் முக்கிய அரசியல் தலைவராக இருப்பதால் ஒவ்வொரு முறையும் நேரில் வர இயலாது. எனவே அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதைப் பரிசீலித்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். பின்னர் ஜூலை 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications