திருச்சியில் சிக்கிய நெல்லை வாலிபர் வீட்டில் சோதனை!
கடையநல்லூர்: திருச்சியில் 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களுடன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பிடிபட்டார். அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சி கோட்டை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சமஸ்பிரான் தெருவில் மின்சார வயர்கள், 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களுடன் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.
விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வடகரையை சேர்ந்த ராஜாமுகமது என தெரியவந்தது. அவர் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதும், போலி முகவரி கொடுத்து மூன்று பாஸ்போர்டுகள் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கோட்டை போலீசார் ராஜாமுகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தீவிரவாத அமைப்புகளோடு அவருக்கு தொடர்பு இருக்கிறதா, என விசாரணை நடத்தப்பட்டது.
ராணுவத்தில் இவர் எந்த பிரிவில் பணியாற்றினார், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவு அல்லது தொழில்நுட்ப பிரிவில் அவர் வேலை பார்த்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராஜாமுகமதுவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பற்றி பயிற்சியளித்து வரும் துவாக்குடி அருகேயுள்ள காட்டூரை சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடமும், கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தென்காசி அருகேயுள்ள ராஜாமுகமதுவின் வீட்டில் திருச்சி தனிப்படை போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று அச்சன்புதூர் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
திருச்சி தனிப்படை போலீசாரும் நேற்று சோதனை நடத்த தென்காசிக்கு வருவதாக அச்சன்புதூர் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications