ராமேஸ்வரம் மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை: தூதர்
சென்னை: ராமேஸ்வரம் மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் அம்சா கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 800க்கும் மேற்பட்ட படகுகளில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் சந்தியாகு என்கிற மீனவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் இலங்கை கடற்படைக்குத் தொடர்பு இல்லை என்று இலங்கை துணைத் தூதர் அம்சா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டினால் தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி எமது கவனத்தை ஈர்த்தது.
மேற்கண்ட செய்தி இலங்கை கடற்படை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தினர். இதில், இலங்கை கடற்படைக்கும் மேற்கண்ட சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் பலமுறை நடுக்கடலில் சிக்கித்தத்தளித்தபோது இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு தங்களுக்கு உதவிகளைச் செய்துள்ளது என தமிழக மீனவர்கள் பலசந்தர்ப்பங்களில் நன்றியோடு ஒப்புக்கொண்டுள்ளதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
எனினும் சில தீய சக்திகள் சுயநலத்துக்காக தமிழக மீனவர்களிடையே இலங்கை கடற்படைக்கு இருக்கும் நற்பெயரை குலைக்க முயற்சி நடந்திருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.
இருப்பினும் இலங்கை கடற்படை, இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் மீனவர்கள் உள்பட அனைத்து இந்திய மீனவர்களையும் மனிதாபிமானத்தோடு கையாளும் தனது கொள்கையை தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது என்று கூறியுள்ளார் அம்சா.












Click it and Unblock the Notifications