சேது திட்டத்தை நிச்சயம் முடித்தே தீருவோம்-பாலு
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை நிச்சயம் முடித்தே தீருவோம். பாக். நீரிணைப்பில் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
சென்னை தீவுத் திடலில் நடந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகளை பார்க்கும்போது 85 வயது என்று தெரியவில்லை. உண்மையில் அவருக்கு 85 வயது அல்ல. 8 வயது பிளஸ் 5 வயது அதாவது 13 வயது.
அவருக்கு வயது ஆகிவிடவில்லை. அவர் என்றும் 16 தான். முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும், சோனியா காந்தி சார்பிலும் எனது தனிப்பட்ட முறையிலும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் பிரணாப் முகர்ஜி வாசித்தார். அதில், நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் சமூக, பொருளாதார அந்தஸ்து உயர்வதற்கான கொள்கைகளை உருவாக்கிய சிற்பி. இலக்கியத்திற்கும், கலாசாரத்திற்கும் நீங்கள் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம்.
உங்களை போன்ற அறிவாற்றல் மிக்க தலைவரை பெற்றிருக்கும் தமிழக மக்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் உங்களை வாழ்த்துகிறேன். உங்களது தலைமையும், வழிகாட்டுதலும் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் என்றும் பயன்பட வேண்டும் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் பேசுகையில், நாட்டில் தற்போது மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மதவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கி உள்ளன. அந்த மதவாத சக்திகளை முதல்வர் கருணாநிதி தலைமையில் முறியடிப்போம் என்றார்.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, முதல்வர் கருணாநிதி சாதாரண மனிதர் அல்ல. வித்தியாசமானவர். 85 வயதில் இவ்வளவு உற்சாகத்தோடும், மனத்தெளிவோடும் தமிழர்களுக்காக பணியாற்றி வருகிறார். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். நான்கூட சிக்கல்கள், பிரச்சினைகள் வரும்போது அவரைத்தான் நினைத்துக் கொள்வேன். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக, சுகமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. பேசுகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து போராடி வருகிறார். 85 வயதிலும் உடல் சோர்வு அடையாமலும் மனச்சோர்வு அடையாமலும் தமிழ் மக்களுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் உழைத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒற்றை மனிதர் அல்ல. வரலாற்று நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில், சேது சமுத்திர திட்டத்தை முதல்வர் கருணாநிதியின் அரவணைப்பில் முடித்தே தீருவோம். பாக். நீரிணைப்பில் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும்.
நீதிமன்ற தீர்ப்பு நிச்சயம் நல்ல தீர்ப்பாக வரும். அந்த தீர்ப்பு வந்து, ஒரு சில மாதங்களில் கருணாநிதியை மிகப்பெரிய வெற்றி தேடித் தரும் என்றார்.












Click it and Unblock the Notifications