கணவரை சந்தோஷப்படுத்த குழந்தையைக் கடத்திய பெண்
நாகர்கோவில்: குழந்தை இல்லாததால் வருத்தத்துடன் இருந்த 2வது கணவரை சந்தோஷப்படுத்துவதற்காக 4 மாதக் குழந்தையைக் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த ராஜாவூரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்தால் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இங்கு தென் தாமரைகுளம் சித்தன் குடியிருப்பை சேர்ந்த ராஜா என்பவர் உடல் குணமடைவதற்காக அங்கு வந்து தங்கினார். அவருடன் மனைவி ஞான செல்வி, மகன்கள் ராஜ மன்னார் (5), ராஜகுமார் (4 மாதம்) ஆகியோரும் தங்கி இருந்தனர்.
இவர்கள் அருகில் தக்கலை தலக்குளத்தை அடுத்த பள்ளவிளையை சேர்ந்த ரோஸ்மேரி (42) என்பவரும் தங்கியிருந்தார். அவர் ஞானசெல்வியுடன் நெருங்கி பழகினார்.
சம்பவத்தன்று ரோஸ்மேரியிடம் குழந்தையை கொடுத்து விட்டு, ஞான செல்வி சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, 4 மாத குழந்தையையும், ரோஸ் மேரியையும் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் ஞானசெல்வி.
இதையடுத்து போலீஸார் வேட்டையில் இறங்கினர். இதில், நாகர்கோவில் அருகே மருங்கூர் பகுதியில் ரோஸ்மேரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 4 மாத குழந்தை ராஜகுமாரையும் மீட்டனர்.
ரோஸ்மேரியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, குழந்தை ஏக்கத்தில் இருந்த 2-வது கணவரை சந்தோஷப்படுத்த கடத்தி சென்றதாக ரோஸ்மேரி பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அதன்பிறகு தனியாக இருந்த எனக்கும், எங்கள் ஊரை சேர்ந்த வில்லஸ் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் எங்களிடையே நெருக்கத்தை உண்டாக்கியது. இதனால் இருவரும் சேர்ந்து வாழ கோட்டயம் சென்று விட்டோம்.
என் 2-வது கணவர் வில்லஸ் குமாருக்கு குழந்தை மீது ஆசை ஏற்பட்டது. ஆனால் எனக்கு கர்ப்பப்பையை எடுத்து விட்டதால் குழந்தை பிறக்காது என்ற தகவலை அவரிடம் சொன்னால் என் மீது உள்ள அன்பு குறைந்து விடுமோ என்று நான் அஞ்சினேன்.
இதனால் நான் கர்ப்பமாக இருப்பதாக வில்லஸ் குமாரிடம் கூறினேன். அதை அவர் நம்பியதோடு மட்டுமல்லாமல் தினமும் குழந்தை பற்றியே பேசி வந்தார்.
அப்போது எனக்கு ஞான செல்வியின் பழக்கம் ஏற்பட்டது. அவருடைய 2-வது குழந்தை ராஜகுமார் அழகாக இருந்தான். என்னை பார்க்க வராத கணவரை சந்தோஷப்படுத்துவதற்காக ராஜகுமாரை எனக்கு பிறந்த குழந்தை என்று வில்லஸ் குமாரிடம் காட்டி அவரின் அன்பு முழுவதையும் பெற முடிவு செய்தேன்.
இதையடுத்து ஞானசெல்வி சாப்பிட சென்ற போது, குழந்தையை எடுத்து சென்று விட்டேன் என்று கூறியுள்ளர் ரோஸ் மேரி.












Click it and Unblock the Notifications