வரிசையில் நின்ற வாகன ஓட்டிகள்-மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள்
சென்னை: விலை உயர்வு அமலுக்கு வந்த பின், நள்ளிரவுக்கு மேல் பெட்ரோல்-டீசலை விற்றால் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதால் நேற்று பி்ற்பகலிலேயே தமிழகம் முழுவதும் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.
இரவு 12 மணிக்கு மேல் பங்குகளை திறந்து, பழைய விலைக்கு வாங்கிய பெட்ரோல், டீசலை முறையே ரூ. 5, ரூ. 3 கூடுதல் விலை வைத்து மக்கள் மீது கட்டி கொள்ளை லாபம் அடித்தனர் பல பங்குகள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவுக்கு மேல் அமலுக்கு வரும் என மத்திய அமைச்சரவை பகல் 12 மணியளவில் முடிவெடுத்த அரை மணி நேரத்திலேயே தமிழகத்தில் பல பங்குகள் மூடப்பட்டன.
வெளியே ஸ்டாக் இல்லை என்ற கொட்டை எழுத்தில் போர்டுகள் தொங்கவிடப்பட்டன. இதையடுத்து நள்ளிரவில் தான் இந்த பங்குகள் திறந்தன. விலையும் உயர்த்தப்பட்டது. இத்தனைக்கும் இவர்கள் விற்றது பழைய விலைக்கு வாங்கப்பட்ட பெட்ரோல்-டீசல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசையில் நின்ற மக்கள்:
மேலும் பல பங்குகளில் உண்மையிலேயே பெட்ரோல்-டீசல் மிக வேகத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதனாலும் பல பங்குகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெட்ரோல் விலை இன்றே லிட்டருக்கு ரூ. 10 வரை உயரப் போகிறது என்று புரளி கிளம்பியதால், காலை முதலே வாகன ஓட்டிகள், குறிப்பாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பங்குகளை நோக்கி படை எடுத்தனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பங்குகள் திணறின.
வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு ஆட்களை மட்டும் அவை வரிசையில் நிற்க வைத்தன. பின்னர் ஒவ்வொருவரின் முறை வந்ததும் அவர்களை வண்டியை எடுத்து வரச் சொல்லி பெட்ரோல் ஊற்றினர்.
அதிலும் ஒரு ஆளுக்கு 2 லிட்டர் தான் என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ரேசன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க நிற்பது போல பல மணி நேரம் க்யூவில் நின்று வண்டிகளில் பெட்ரோலை நிரப்பிச் சென்றனர் வாகன ஓட்டிகள்.
கிருஷ்ணகிரியில் சாலை மறியல்:
நேற்று மாலை கிருஷ்ணகிரியில் உள்ள சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் திடீரென பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தப்பட்டது. வாகன ஓட்டிகள், பெட்ரோலை பதுக்குகிறீர்களா என்று கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை குறுக்கே நிறுத்திவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications