என்ஜீனியரிங் கல்வி கட்டணம்: ராமதாஸுக்கு கருணாநிதி பதில்

என்ஜீனியரிங் கல்லூரி கட்டணம் தொடர்பாக நேற்று முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் குற்றம்சாட்டி பேட்டி அளித்திருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டதாகத் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கடுமையாக கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளனர்.
குறிப்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இரண்டுக்கும் ரூ. 32,500 கட்டணம் இருந்தது. இதை இந்த ஆண்டு ரூ. 62,500 என்று உயர்த்தி உள்ளனர் என்று சொல்லியிருக்கிறார்.
உண்மைக்கு மாறானது:
இது உண்மைக்கு மாறான ஒன்று. அரசு ஒதுக்கீடு செய்யும் மாணவர் களுக்கான கட்டணம் 32 ஆயிரத்து 500 ரூபாய் என்பது அப்படியேதான் உள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளாக அதே கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை. அரசு ஒதுக்கீடு 65 சதவிகிதம் மாணவர்கள். எனவே மொத்த மாணவர்களில் அரசு ஒதுக்கீடு செய்கின்ற 65 சதவிகித மாணவர்களுக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் தற்போது செய்யப்படவில்லை.
இந்த மாணவர்கள் அந்தக் கல்லூரிகளுக்குச் சென்று பணம் கட்டினால் அதிகத் தொகையைக் கட்டுமாறு வலியுறுத்தப்படக்கூடும் என்பதால், அதனைத் தவிர்ப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திலேயே அந்தப் பணத்தைக் கட்டி, ரசீது பெற்றுக் கொண்டு கல்லூரியில் சேரலாம் என்று இந்த ஆண்டு முதல் கூறப்பட்டுள்ளது.
அடுத்து கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடான 35 சதவிகித மாணவர்களுக்கு தற்போது ரூ. 62,500 கட்டணம் என்று நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
அது கடந்த ஆண்டு ரூ. 32,500 ஆக இருந்தது. இப்போது உயர்த்தி விட்டார்கள் என்று அறிக்கை விட்டுள்ள அனைவரும் சொல்லியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ. 32,500 என்று பெயர் அளவில் பேப்பர் அளவில் இருந்ததே தவிர, பல சுய நிதி கல்லூரிகள் அந்தக் கட்டணத்திற்கு மாணவர்களை அனுமதிக்கவில்லை என்பது தான் உண்மை.
கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு என்பதால் அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, கல்லூரிகளின் தரத்திற்கு ஏற்றவாறு லட்சக்கணக்கில் வசூலித்தார்கள் என்பது தான் உண்மை. அது அனைத்து மாணவர்களுக்கும் தெரியும். எனவே கடந்த ஆண்டு கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்கள் ரூ. 32,500 மட்டுமே கட்டினார்கள் என்பது உண்மையல்ல.
ரசீது இந்த ரூபாய்க்கு மட்டும் வழங்கப்பட்டு, மீதத் தொகை ரசீது இல்லாமல் வசூலிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த ஆண்டு நான் கூறி, அதற்கான முயற்சிகளில் துறை ஈடுபட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்தக் கொடுமையிலிருந்து மாணவர்களை மீட்கவும்- அவர்கள் குறைந்தபட்சம் ரூ. 62,500ஐ வங்கியிலிருந்து கடன் பெற உதவிடும் நோக்கத்தோடும், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கட்டணத்தை நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
கூட்டணி கட்சித் தலைவர்களை கலந்து பேசுவதே கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் சொல்லியிருக்கிறார்.
ராமதாஸின் நோக்கம் புரியவில்லை:
இந்தப் பிரச்சனை குறித்து 5.3.2008 அன்றும் 20.5.2008 அன்றும் தோழமைக் கட்சிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலே நடைபெற்று, பா.ம.க. சார்பில் 5.3.2008 கூட்டத்தில் கோ.க.மணியும், 20.5.2008 கூட்டத்தில் கி.ஆறுமுகமும் கலந்து கொண்டார்கள் என்பதையும்,
அதற்காக அவர்களிடமிருந்து கையெழுத்தே பெறப்பட்டுள்ளது என்பதையும் செய்தியாளர்களிடம் மறைத்து விட்டு, கூட்டணி கட்சிகளைக் கலந்து கொள்ளவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டை டாக்டர் ராமதாஸ் சுமத்தி யிருப்பதின் நோக்கம் தான் என்னவென்று எனக்குப் புரியவில்லை.
அறிவாலயத்தில் எப்படிப் பேச முடியும்?
மேலும் ராமதாஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவாலயம் போய் அதிகமான நாள் ஆகி விட்டது என்கிறார். அரசு பிரச்சனைகளை தலைமைச் செயலகத்தில் பேச வேண்டுமே தவிர, அறிவாலயத்தில் எப்படி பேசவது?. அறிவாலயத்திற்கு அழைத்தால், அரசு பிரச்சனைகளைப் பேசிட அறிவாலயத்திற்கு அழைப்பதா என்பார்.
மேலும் அவர் 'கலைஞர் என்ன நினைக்கிறார் என்றால், தன்னிச்சையாக நாங்கள் முடிவு எடுப்போம், நாங்கள் அறிவிக்கும் அறிவிப்புகளை எல்லாம் கூட்டணி கட்சியில் இருக்கும் நீங்கள் ஆதரித்துத்தான் ஆக வேண்டும்' என்று சொல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கடந்த வாரம் மணல் பிரச்சனைக்காகக் கூட சட்டமன்றக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசிய போது, நாங்கள் அறிவித்ததை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமென்று வலியுறுத்தவில்லை என்பதையும், தோழமைக் கட்சிகள் மட்டுமே கலந்து கொண்ட கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களைத் தான் ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றினோம் என்பது அவருக்கு அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டதுதான் ஆச்சர்யம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அல்ல:
டெல்லியில் மத்திய அரசில் தோழமைக் கட்சிகளை அழைத்துப் பேசுவதாகவும், தமிழகத்தில் ஏன் அழைக்கவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறார். டெல்லியிலே நடைபெறுவது கூட்டணி ஆட்சி. தமிழகத்திலே நடைபெறுவது தி.மு.க. ஆட்சி.
இருந்தும் கூட பல முக்கியமான பிரச்சனைகளில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கலந்தாலோசித்துதான் முடிவெடுக்கிறோம். அதற்காக ஒவ்வொரு கோப்பில் கையெழுத்திடும்போதும் கலந்தாலோசிக்க வேண்டுமென்றால் அது எப்படி சாத்தியம்?.
கல்லூரிகள் நிர்வாகத்தின் சார்பில் அரசு ஒதுக் கீட்டுக்கான கட்டணம் கடந்த 5 ஆண்டு காலமாக உயர்த்தப்படவே இல்லை என்றும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனை உயர்த்த வேண்டுமென்று குழு பரிந்துரை உள்ளது என்றும் வாதாடிய போதிலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அரசு ஒதுக்கீட்டிற்கான கட்டணத்தை உயர்த்த ஒப்புக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார்கள்.
உயர்த்தாவிட்டால், அவர்கள் நீதிமன்றம் செல்லக்கூடுமே என்றபோது, அப்படியென்றால் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டிற்கு வேண்டுமானால், மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல ஓரளவு உயர்த்தலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழு. அந்தப் பரிந்துரைகளில் கூறியுள்ள கட்டணமே போதாது என்று அந்தக் கல்லூரிகளின் அமைப்பின் சார்பில் அறிக்கை வந்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டிற்கான கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் கூட நடைமுறையில் மற்ற மாநிலங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் குறைந்த அளவிற்குத் தான் உள்ளது என்பது நேற்றைய தினமே உயர் கல்வித் துறை அமைச்சரால் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்:
இவ்வளவிற்கும் பிறகு, கல்வி கட்டணம் பற்றி கூறு வதை விட, என்னையும் அரசையும் குறை கூற வேண்டும் என்ற முடிவோடு தான் ராமதாஸ் பேட்டி அளித்திருக்கிறார் என்று கருத வேண்டியிருக்கிறது.
எனவே இந்த அரசைப் பொறுத்தவரை எந்த விதமான விருப்பு வெறுப்புமின்றி மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.
மேலும், சுய நிதி கல்லூரிகளின் நிர்வாகிகள் அமைப்பும், தாங்கள் விடுத்துள்ள அறிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு-இந்த அரசின் குறிக்கோள் கல்வி வியாபாரமாக ஆகி விடக்கூடாது என்பது தான் என்பதை மனதிலே கொண்டு- மாணவர்களின் ஒட்டு மொத்த கல்வி வளர்ச்சி கருதி இந்த அரசின் முயற் களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று அனைவரையும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications