லாயக்கில்லாமல் போன காவல்துறை-ஜெ
சென்னை: எனது ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று எதற்குமே லாயக்கில்லாமல் செயலிழந்து இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கும்மிடிப்பூண்டி அருகே கண்டிகை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிணற்றில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது, கிணற்றின் அருகே துருப்பிடித்த துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன.
இதைப் பற்றி தெரியாத சிறுவர்கள் அவற்றை விளையாட்டாக எரித்து இருக்கின்றனர். அப்போது பயங்கர சத்தத்துடன் சில தோட்டாக்கள் வெடித்து இருக்கின்றன. இதில், நகுலேஸ்வரன் மற்றும் ஜெய்சன் குரூஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கிணற்றின் அருகே உள்ள புதரிலும், பாழடைந்த மோட்டார் அறையிலும், மூன்று அங்குலம் அளவுடைய, சுமார் 40 கிலோ எடை கொண்ட ஏ.கே. 47 மற்றும் பல்வேறு ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய மூன்று மூட்டை தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி கிணற்றுக்குள் வேறு ஏதாவது வெடி பொருட்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சியை காவல் துறையினர் மேற்கொண்டபோது, சுமார் 15 மூட்டை தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேற்படி தோட்டாக்களில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இது போன்ற தோட்டாக்கள் தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதோ? எப்பொழுது அவைகள் வெடிக்குமோ? என்ற அச்ச உணர்வில் தமிழக மக்கள் உறைந்து போயுள்ளனர்.
எனது ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று எதற்குமே லாயக்கில்லாமல் செயலிழந்து இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications