கார்த்திக்கின் 'நாடாளும் மக்கள் கட்சி'

தொடங்கினார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பொறுப்பேற்றார் கார்த்திக். ஆனால் அவரது செயல்பாடுகள் திருப்தி தரவில்லை என்று கூறி சமீபத்தில் தலைவர் பதவியிலிருந்து கட்சி மேலிடம் நீக்கியது.
இதையடுத்து புதுக் கட்சி தொடங்க வேண்டும் என கார்த்திக் ஆரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி நேற்று தனது புதிய கட்சி மற்றும் கொடியை அறிவித்தார் கார்த்திக்.
செய்தியாளர்களிடம் கட்சி, கொடி குறித்து தெரிவித்து கார்த்திக் பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள், தொலை நோக்குத் திட்டங்களை அடிப்படையாக வைத்து இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளோம்.
கட்சிக்கு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்று பெயரிட்டுள்ளோம். முத்துராமலிங்கத் தேவர் படத்துடன், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கட்சிக் கொடி இருக்கும்.
நாங்கள் அனைத்து ஜாதி மக்களுக்காகவும் போராடுவோம். இது ஜாதிக் கட்சி அல்ல.
நடிகர்கள் கட்சி தொடங்குவது புதிதல்ல. விஜயகாந்த் ஆரம்பித்துள்ளார். சரத்குமாரும் தொடங்கியுள்ளார். நானும் தொடங்கியுள்ளேன். முதல்வர் பதவியைக் குறி வைத்து கட்சி தொடங்கவில்லை.
கட்சியின் முதல் மாநில மாநாட்டை நெல்லை அல்லது மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதுதொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும்.
விரைவில் கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். நான் நிறுவனத் தலைவராக செயல்படுவேன் என்றார் கார்த்திக்.
சரத்குமார் பாணியில் தனது கட்சியின் பெயரை அமைத்துள்ளார் கார்த்திக். சரத்குமாரின் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. கார்த்திக்கின் கட்சிக்கு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்துடன் கூட்டணி சேரும் சூழல் ஏற்பட்டால் அவருடன் பேசுவேன் என்று சரத்குமார் கூறியுள்ளார். கார்த்திக்குடன் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த மூன்று பேரும் சேர்ந்து புதிய கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications