25 ஆண்டுகளாக பாதையின்றி தவிக்கும் தலித் மக்கள்!
மதுரை: மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில், 25 வருடங்களாக பாதை வசதியின்றி தலித் மக்கள் தவித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் 45 கி.மீ தொலைவில் உள்ளது நக்கலப்பட்டி என்ற கிராமம் . இங்கு சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன.
இதில் 350 குடும்பங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த தலித் மக்களில் பெரும்பாலோர் மதுரை-போடி இடையே செல்லும் ரயில்வே இருப்புப் பாதையின் வடக்குப் பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு தெருவிளக்கு வசதி, சாலை வசதி , சமுதாயக் கூடம், பொதுச் சாவடி என ஒரு வசதியும் இல்லை. இதைவிட கொடுமை, இறந்தவர்களை தூக்கிச் செல்வதற்கு பாதை இல்லை என்பது தான்.
இது குறித்து அப் பகுதி தலித் மக்கள் சிலர் கூறுகையில், நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒருவர் இறந்துவிட்டால் இறுதி சடங்கான பாடை கட்டுவது, தேர் கட்டுவது போன்றவை குறுகலான வீதிக்குள் செய்ய இயலாது.
இதனால் இறந்தவர்களை தோளில் போட்டு தூக்கிக்கொண்டு இருப்புப் பாதையை கடந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தான் பாடையிலோ, தேரிலோ வைத்து மயானத்திற்கு கொண்டு செல்லகிறோம்.
இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாதாதல் டார்ச் லைட் வெளிச்சத்தில் உடலைத் தூக்கி செல்கிறோம். பெண்கள் பிரசவவலியில் துடித்தால் கூட ஆட்டோ வேன் வராது. வழக்கம் போல் தோளில் தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.
ரயில்வே இருப்புப் பாதையை கடந்து அரசமரத்தடியை சென்றடைவதற்கு பாதை இருக்கிறது. ஆனால் அது ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால் ஆட்டோ முதல் வேன் வரை எல்லா வாகனங்களும் ரயில்வே இருப்புப்பாதை வரை வந்துவிடும்.
இந்த கோரிக்கையை நாங்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 25 ஆண்டுகளாக வலியுத்தி வருகிறோம். ஆனால் பலன் தான் இல்லை என்கிறார்கள்.
உத்தபுரத்தில் தலித் மக்களுக்காக உடைக்கப்பட்டது சுவர். இங்கோ, பாதையே இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் அவலம். மாவட்ட நிர்வாகம் மந்த நிலையை விலக்கி தலித் மக்களுக்கு பாதை போட்டுத் தர முயற்சிக்குமா?












Click it and Unblock the Notifications