திருப்பதி கோவிலில் செல்போன் திருட்டு-ஊழியர்களிடம் விசாரணை!
திருப்பதி: திருப்பதியில், சென்னையைச் சேர்ந்த பக்தர்களிடமிருந்து 7 செல்போன்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக கோவில் ஊழியர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பதியில் பக்தர்கள் பல்வேறு கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அத்தகைய பஸ் ஒன்றில் 60 பக்தர்கள் ஏறி, திருச்சானூருக்கு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்வதற்காக சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.
பஸ் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்றதும் பஸ் டிரைவர் சந்திரய்யா, கைடு ஜெயச்சந்திரன் ஆகியோர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. எங்களிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள், தரிசனம் முடிந்து திரும்பியதும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
இதையடுத்து பக்தர்களும் தங்கள் வசம் இருந்த 30 செல்போன்களை அவர்களிடம் கொடுத்தனர். பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பி வந்து கேட்டபோது, இரு ஊழியர்களும் செல்போன்களைப் போட்டு வைத்திருந்த பையில் 23 செல்போன்கள் மட்டுமே இருந்தன. 7 செல்போன்களைக் காணவில்லை.
அனைத்தும் விலை உயர்ந்த செல்போன்களாகும். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம்.
அதுபற்றி விசாரித்தபோது, டிரைவரும், கைடும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.
இதையடுத்து பக்தர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications