கடலோர பாதுகாப்பில் திமுக அரசு மெத்தனம்-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கடலோர பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடல்சார் காவல் நிலையங்களை அமைக்காமல் நாட்டின் பாதுகாப்பில் திமுக அரசு மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் கடல் வழியாக தீவிரவாத அச்சுறுத்தலை இந்தியா சந்தித்துக் கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும், பாதுகாப்பு வல்லுனர்களும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

மேற்படி பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் உள்ள முக்கியமான துறைமுகங்களை தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்.

இதற்குக் காரணம் கடலோர பாதுகாப்புத் திட்டம் என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் கடல்சார் காவல் நிலையங்களையும், சோதனைச் சாவடிகளையும் திமுக அரசு அமைக்காதது தான்.

கடல் வழியாக பயங்கரவாத, தீவிரவாத அச்சுறுத்தல் இந்தியாவிற்கு இருக்கிறது என்பதற்காக மத்திய அரசு, கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கடல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான அறிவுரைகளை ஏற்கெனவே வழங்கி இருந்தது.
ஆனால் அண்மையில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில் கடல் பாதுகாப்பில் சில மாநிலங்கள் பின்தங்கி உள்ளதாகவும், அப்பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியதோ, அதில் ஒரு சதவீதம் கூட அரசு நிறைவேற்றவில்லை. அந்த அளவிற்கு நாட்டின் பாதுகாப்பில் திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது.

கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்கவும், கடல் பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பிற்கான கட்ட மைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், தேசிய பாது காப்பு முறையை சீர்திருத்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு' 2005ம் ஆண்டு கடலோர பாதுகாப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்திற்கு அனுமதி அளித்தது.

இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு உட்பட ஒன்பது கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக கடல்சார் காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் அமைக்கவும் மற்றும் தேவையான வாகனங்கள், உபகரணங்கள், படகுகள் ஆகியவற்றை வாங்கவும் தொடராச் செலவினமாக ரூ. 400 கோடி அளவுக்கும், தொடர் செலவினமாக ரூ. 151 கோடி அளவுக்கும் மத்திய அரசு நிதி வழங்கும்.

மேற்படி மத்திய அரசு திட்டத்தின்படி, மகாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்து கடல்சார் காவல் நிலையங்களையும் அமைத்துள்ளன.

ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் 12 கடல்சார் காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கடல் சார் காவல் நிலையம் கூட அமைக்கப்படாதது வேதனைக்குரிய விஷயமாகும்.

மத்திய அரசால் கடலோரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 1994ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் தான், சுமார் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் கடற் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்புப் படையை அமைத்தேன்.

எரிபொருள், மருந்துப் பொருட்கள் மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குக் கடல் வழியாக கடத்தப்படுவதைத் தடுப்பது; தமிழ்நாட்டிற்குள் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பது ஆகியவை கடலோர பாதுகாப்புப் படையின் முக்கிய நோக்கங்களாகும்.

இதைக் கண்காணிக்க ஏதுவாக 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த அளவுக்குத் தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கு எனது ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் தந்தேன்.

மத்திய அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகாவது, கடல்சார் காவல் நிலையங்களையும், சோதனைச் சாவடிகளையும் உடனடியாக அமைத்து, தமிழர்களின் பாதுகாப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+