பதிய சட்டசபை-நாளை கருணாநிதி அடிக்கல்
சென்னை கடற்கரை புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது தமிழக சட்டமன்றமும், தலைமைச் செயலகமும், அதையொட்டியுள்ள அரசு அலுவலக கட்டிடமும் அமைந்துள்ளன இடம் ராணுவத்துக்கு சொந்தமானதாகும்.
இதற்கு வாடகை செலுத்தி வருகிறது தமிழக அரசு. சட்ட சபையையோ, தலைமைச் செயலகத்தையோ விரிவாக்கம் செய்ய அங்கு இடமில்லை.
இதனால் கடும் இட நெருக்கடியில் தான் சட்டமன்றம், தலைமைச் செயலகம், அரசு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
இதையடுத்து விரிவான, நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டசபை, தலைமைச் செயலகம் கட்ட முடிவானது. ஆனால், இடத் தேர்வில் சிக்கல் எழுந்தது.
மீனவர் குப்பங்களைத் தூக்கிவிட்டு கடலோரத்தில் சட்டமன்றத்தை அமைக்க முயன்றார் ஆட்சியில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மீனவர்களின் கடும் எதி்ர்ப்பையும் பொருட்படுத்தாமல் அதை செயல்படுத்த முயன்றபோது மேதா பட்கரே நேரில் வந்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து ஜெயலலிதா பின் வாங்கினார்.
இதையடுத்து வரலாற்று சிறப்பு வாய்ந்த ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அங்கு சட்டமன்றம் கட்ட முயன்றார். இதை எதிர்த்த ஆசிரியையகள், மாணவிகளை போலீஸை விட்டு தாக்கினார். பலர் கைதாகினர்.
மாநிலம் முழுவதும் இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையிலே தேர்தல் வந்துவிட்டது. அதில் ஜெயலலிதா மண்ணைக் கவ்வியதையடுத்து ராணி மேரிக் கல்லூரி தப்பியது.
இதையடுத்து திமுக ஆட்சியில் இடத் தேர்வு மிகுந்த ஜாக்கிரதையுடன் நடந்தது. அடுத்தவர் இடத்தில் கை வைத்து சிக்கலில் மாட்டாமல், அரசுக்கு சொந்தமாக உள்ள அரசினர் தோட்டத்தி்லேயே அதைக் கட்ட முடிவானது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த பாழடைந்த பங்களாவில் செயல்பட்டு வந்த சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் பழைய எம்எல்ஏ ஹாஸ்டலின் ஒரு பகுதி, அரசின் பிரஸ் உள்பட வேறு சில பழைய கட்டடங்களும் இடிக்கப்பட்டன.
இப்போது அங்கு ரூ.200 கோடி செலவில் 1.6 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் கட்டப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகத்தைக் கட்ட உலக அளவிலான டெண்டர் கோரப்பட்டு ஜெர்மனியை சேர்ந்த ஜி.எம்.பி. கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎம்பியின் முன்னணி டிசைனர்களான கேத்ரீனா புரோசே, கிரிஸ்டென் ஓட்டே, ஹெல்ஜே லெசூயிஸ், ஜூலியான் ஆகியோர் இந்த கட்டடத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த நிறுவனம் 2010ம் ஆண்டு இந்த கட்டிடத்தை கட்டி முடிக்கும்.
நவீனமும் திராவிட கட்டிடக் கலையும் இணைந்ததாக இந்த கட்டடம் வடிமைக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications