ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு: நிரந்தர ஊழியர்களும் ஸ்டிரைக் செய்ய முடிவு

என்.எல்.சி. நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் சந்தோஷ் பொகார்டியா முன்னிைலயில் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்களுக்கான இரு அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களான, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட நான்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தாங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவிருப்பதாக நிரந்தர தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனால் என்.எல்.சியில் மின் உற்பத்தி சுத்தமாக நின்று போகும் நிலை ஏற்படும்.
இதற்கிடையே, நாளை ஒப்பந்த ஊழியர்கள்,தங்களதுகுடும்பத்தினருடன் நாளை என்.எல்.சியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளதால், என்.எல்.சி. வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications