டி.எஸ்.பி என்று கூறி கிருஷ்ணசாமி மனைவிக்கு மிரட்டல் - 2 பேர் கைது
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவியை அணுகிய இருவர்,டி.எஸ்.பி. என்று கூறி பணம் கேட்டுமிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மதுரை அருகே கிருஷ்ணசாமி தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து மயிலாப்பூர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு மதியம் 2 மணிவாக்கில் கிருஷ்ணசாமி வீட்டுக்கு இருவர் வந்துள்ளனர். அவர்களை பாதுகாப்புக்கு இருந்தபோலீஸார் தடுத்து விசாரித்தபோது, தங்களை டி.எஸ்.பி. என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்புப் போலீஸார் உள்ளே அனுமதித்தனர். வீட்டுக்குள் நுழைந்த இருவரும், கிருஷ்ணசாமியின் மனைவி சித்ராவிடம், நாங்கள் டி.எஸ்.பி, தலைவரைப் பார்த்துப் பணம் கேட்க வந்தோம். பணம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர்.
இருவரும் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த சித்ரா, அவர்களை வெளியே போகுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் பணம் கொடுத்தால்தான் போவோம் என்று சித்ராவை மிரட்டியுள்ளனர்.
இதைப் பார்த்த பாதுகாப்புப் போலீஸார் விரைந்து வந்து இருவரையும் பிடித்தனர். சித்ராவின் மகன் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து உதவி ஆணையர் ஐசக் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் ஆகியோர் விரைந்து வந்தனர்.
இருவரையும் பிடித்து விசாரித்ததில், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் என்பதும், இருவரும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
மருத்துவச் செலவுக்காக காங்கிரஸ் எம்.பி. ஜெயந்தி நடராஜனை சந்தித்து பணம் கேட்க வந்ததாக போலீஸில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications