அம்பானி பிரதர்ஸ் மீண்டும் லடாய்!
டெல்லி: அம்பானி சகோதரர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.டி.என். நிறுவனத்தை வாங்குவதற்கு, முகேஷ் அம்பானி இடையூறு செய்வதாக ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பானி சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து சொத்து பிரிக்கப்பட்டது. தனது பங்குடன் தனியாக வந்த அனில் அம்பானி, அனில் திருபாய் அம்பானி குழுமத்தை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் இரு சகோதரர்களும் தத்தமது பாதையில் நடை போட்டு வருகின்றனர். இந் நிலையில், எம்.டி.என். நிறுவனத்தை ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் வாங்க முயன்று வருகிறது.
ஆனால், இதற்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இடையூறு செய்வதாக அனில் அம்பானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்களது நிறுவனத்துக்கு, எம்.டி.என். நிறுவனத்தை விற்க கூடாது என்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் மூலம் மறைமுகாக கோரிக்கை விடுத்துள்ளது. இது நியாயமற்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முட்டுக்கட்டை முயற்சிகள் பலிக்காது. எங்களது முயற்சிகளுக்கு இடையூறாக இது இருந்தாலும், அதைத் தாண்டி நாங்கள் சாதனை படைப்போம்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முயற்சி, அவர்களது விரக்தி, தோல்வியையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் அனில் அம்பானியின் குற்றச்சாட்டை முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்க அந்த நிறுவனம் மறுத்து விட்டது.
தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என். நிறுவனத்தை (Reverse-Takeover) முறையில் அனில் அம்பானி குழுமம் வாங்க முயற்சித்து வருகிறது.
அதாவது எம்.டி.என்னை வாங்கும் ரிலையன்ஸ் டெலிகாம், பின்னர் எம்.டி.என்னின் துணை நிறுவனமாகிவிடும். வாங்கும் நிறுவனமே வாங்கப்படும் நிறுவனத்துடன் இணைந்துவிடும்.
முதலில் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தி வரும் சுனில் மிட்டலின் பாரதி டெலிகாம் தான் எம்.டி.என்னை வாங்க முயன்றது. ஆனால், எம்.டி.என்னின் Reverse-Takeover நிபந்தனையை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டது.
இதையடுத்து ரிலையன்ஸ் டெலிகாம் அதை வாங்கும் முயற்சியில் இறங்கியது. எம்டிஎன்னும் ரிலையன்சும் இணைந்தால் அது உலகின் டாப் 10 தொலைபேசி நிறுவனமாக உருவெடுக்கும். மேலும் ரிலையன்ஸ் டெலிகாமின் பங்கு மதிப்பு ரூ. 50,000 கோடியாக உயரும்.
இதனால் அதைத் தடுக்கும் வேலையில் முகேஷ் இறங்கியுள்ளதாக அனில் தரப்பு குற்றம் சாட்டுகிறது.