For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரவுடியை கொன்றது ஏன்?: தாய்-மகள்கள் வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: தங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததால்தான் ரவுடி செல்வராஜை வெட்டிக் கொலை செய்து எரித்தோம் என்று நெல்லையைச் சேர்ந்த தாயும், மகளும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நெல்லை, பாளயங்கோட்டை பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி செல்வராஜ். பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை இவரது அண்ணன் மனைவி வேலமமாள், மகள் முத்துமாரி ஆகியோர் அதிகாலையில், தெருவில் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவான வேலம்மாளையும், முத்துமாரியையும்
பஸ் நிலையத்தில வைத்து போலீஸார் கைது செய்தனர். இருவரும் செல்வராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள்களையும் அவர்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸில் இருவரும் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்:

என் தந்தை பட்டன் இறந்த பிறகு தாயார் வேலம்மாளும், நாங்களும் மிகவும் கஷ்டப்பட்டோம். அப்போது எங்களுக்கு உதவி செய்வது போல் வந்த சித்தப்பா செல்வராஜ் என் தாயார் வேலம்மாளிடம் அடிக்கடி வரம்பு மீறி நடந்து செக்ஸ் தொந்தரவு செய்வார்.

எங்கள் தாயார் எங்கள் பாதுகாப்புக்காக வேறு வழியின்றி செல்வராஜை எங்களுடன் தங்கி இருக்க சம்மதித்தார். ஆனால் அவர் குடித்து விட்டு எங்கள் அம்மாவை அடித்து உதைத்து படாதபாடு படுத்துவார். குடும்ப கஷ்டத்தில் அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம்.

அவரிடம் இருந்து தப்பிக்க நான் திருப்பூரில் மில் வேலைக்கு சென்றேன். அங்கு சம்பாதித்து 10 பவுன் நகை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

ஆனால் வீட்டிலோ குடிபோதையில் செல்வராஜ், என் தாயிடம் செக்ஸ் வெறியை காட்டுவதோடு நில்லாமல் என்னிடமும் வரம்பு மீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனால் செல்வராஜை வீட்டுக்கு வரக் கூடாது என்று அடித்து வெளியே விரட்டினோம். அப்போது எனது 10 பவுன் தங்க சங்கிலியை திருடிக் கொண்டு அவர் ஓடி விட்டார்.

நான் படாதபாடு பட்டு உழைத்த தங்க சங்கிலியை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கெஞ்சிப் பார்த்தேன். அவர் தரவில்லை. இதனால் போலீசில் புகார் செய்தேன். அப்படியும் நகையை அவர் கொடுக்க வில்லை.

சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வந்த செல்வராஜ், நகை வேண்டும் என்றால் என்னுடன் வா என்று கையைப் பிடித்து இழுத்தார். இதனால் ஆத்திரம் தீர அடித்தோம். இதனால் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள சமுதாய கூடத்திற்கு சென்று படுத்துக்கொண்டார்.

இனியும் செல்வராஜை விட்டு வைத்தால் குடும்பத்தையே நாசம் செய்து விடுவான், நிம்மதியாக உழைத்து நகை வாங்கவும், முடியாது என்பதால் வெட்டிக்கொலை செய்வது என்று நானும், எனது தாயாரும் முடிவு செய்தோம்.

அதன்பிறகு நேற்று காலை ஆளுக்கொரு அரிவாளுடன் செல்வராஜ் படுத்து தூங்கி கொண்டிருந்த சமுதாய கூடம் உள்ள பகுதிக்கு சென்றோம். அங்கு ஆள் நடமாட்டம் இருந்தது. இதனால் செல்வராஜை சமாதானப்படுத்துவது போல அழைத்துச் சென்றோம். வரும்போதே ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசிக் கொண்டு வந்தார் செல்வராஜ்.

இதையடுத்து தெரு முனையிலேயே வைத்து இருவரும் சரமாரியாக வெட்டினோம். வெட்டுப்பட்ட செல்வராஜ் தப்பிச் செல்ல முயன்றார். இருந்தாலும் விடாமல் வெட்டினோம். குடிநீர் குழாய் அருகே மறித்து சரமாரியாக வெட்டித் தள்ளினோம்.

பின்னர் ஒரு சாக்கை கொண்டு வந்து அதில் செல்வராஜ் உடலை வைத்து கட்டி வீட்டுக்கு தூக்கிச் சென்றோம். ஆனால் சாக்குப் பையில் இருந்து முனகல் சத்தம் கேட்டது. இதனால் அவர் உயிர் பிழைத்து விடக் கூடாது என்று மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X