'பிளசன்ட் ஸ்டே'-இடிக்கும் பணி தொடக்கம்
கொடைக்கானல்: கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 மாடிகள் இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தெடர்ந்து, மீதியுள்ள 3 மாடிகளை இடிக்கும் பணியில் அதன் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கொடைக்கானல் பிளிஸ் வில்லா தெருவில் உள்ளது பிளசன்ட் ஸ்டே. தரைத்தளம், முதல் தளம் இரண்டுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு, கூடுதலாக 5 மாடிகள் கட்டினார் அதன் உரிமையாளரான ராஜேஷ் மித்தல்.
இந்த ஹோட்டலுக்கு முறைகேடாக அனுமதி தந்ததாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் வழக்கில் சிக்கினார்.
விதிமுறை மீறி கட்டப்பட்ட ஹோட்டலை எதிர்த்து பழனிமலை பாதுகாப்பு கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் 5 மாடிகள் கட்டியது சட்ட விரோதம் என 1995ம் ஆண்டிலேயே தீர்ப்பு வழங்கியது.
ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அங்கும் உயர் நீதிமன்ற ஆணை சரியே என்ற உத்தரவு வந்தது. கூடுதலாகக் கட்டப்பட்ட 5 மாடிகளை இடிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், உத்தரவு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாடிகள் இடிக்கப்படவில்லை. இதையடு்த்து பழனிமலை பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து 5 மாடிகளையும் 6 மாதத்திற்குள் அரசு இடிக்க வேண்டும் என்றும், இதற்கான செலவையும், இடிபாடுகளை அகற்றும் செலவையும் ஹோட்டல் உரிமையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 5 மாடிகளை இடிக்க கொடைக்கானல் நகராட்சி டெண்டர் விட்டது. இந்த இடிக்கும் டெண்டரை ரூ. 63 லட்சத்திற்கு ஒரு நிறுவனம் எடுத்தது.
ஆனால், இதையும் எதிர்த்து ஹோட்டல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட பகுதிகளை நாங்களே இடித்து வருகிறோம் என்றும், 2 மாடிகளை இடித்துவிட்டோம், மீதியையும் இடித்து வருகிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகோபாத்தியா, நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் எந்த அளவில் இடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஹோட்டல் நிர்வாகம் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இடிக்கும் பணியில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், நகராட்சி நிர்வாகமே இடிக்க அனுமதி வழங்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந் நிலையில் மீதமுள்ள 3 மாடிகளை இடிக்கும் பணி தற்போது தொடங்கிவிட்டதாகவும், பிரின்ஸ் பில்டர்ஸ் என்ற நிறுவனம் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.
இது தொடர்பான அறிக்கை வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications