மாயமான கர்நாடக பாஜக எம்எல்ஏ மனைவி மர்ம சாவு
கர்நாடக மாநிலம் உடுப்பி சட்டசபைத் தொகுதி பாஜக உறுப்பினர் ரகுபதி பட். இவருடைய மனைவி பத்மப்ரியா. இவர் கடந்த 10ம் தேதி மங்களூர் அருகே முல்கியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு, தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் அதுல் என்பவருடன் காரில் புறப்பட்டார். ஆனால் இருவரும் முல்கி போய் சேரவில்லை.
இதையடுத்து ரகுபதி பட் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கணவன்-மனைவி இடையே பிரச்சனை இருந்திருக்கலாம், இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இந் நிலையில், குஞ்சாருகிரி என்ற வனப் பகுதியில் சென்று கொண்டிருந்த போலீஸார் அங்கு ஒரு கார் அனாதையாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தனர்.
அந்தக் காரை சோதனையிட்டபோது அதில் உடைந்த வளையல்களும், ரத்தக் கறையும் காணப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில், அது ரகுபதி பட்டின் மனைவி பத்மப்ரியா பயணம் செய்த கார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து பத்மப்ரியாவை அதுல் கடத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர். இதற்கிடையே அதுலுக்கும் பத்மப்ரியாவுக்கும் தவறான தொடர்பு இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இந் நிலையில் நேற்று டெல்லி துவாரகா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டில் பத்மப்ரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த குடியிருப்பில் உள்ள ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட் அதுல்-பத்மப்ரியா பெயரில் 3 நாட்களுக்கு புக் செய்யப்பட்டுள்ளது.
இங்கு அதுல் அல்லது வேறு யாருடனாவது பத்மபிரியாவே விருப்பப்பட்டு வந்தாரா அல்லது கடத்தி கொண்டு வரப்பட்டாரா என்று தெரியவி்ல்லை.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்றும் தெரியவி்ல்லை.
இந்தக் தவறான தொடர்பு குறித்து எம்எல்ஏ ரகுபதி பட்டுக்கு தெரியும் என்றும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அனைத்துக் கோணங்களிலும் பத்மப்ரியாவின் மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications