திமுக-பாமக கூட்டணி முறிவு: சோனியா ஆலோசனை
டெல்லி: திமுக, பாமக இடையிலான கூட்டணி முறிந்துள்ளது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து தனது முடிவை காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவருமான சோனியா காந்தி அறிவிப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
திமுக, பாமக உறவு முறிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் போற்றுதலுக்குரிய தலைவராக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்.
அவருடைய தலைமையிலான திமுக கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்ற மேற்கொண்ட முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
தமிழக அளவில் கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றினாலும், மத்தியில், ஆளும் ஐக்கியமுற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பாமகவுக்கு திமுக தலைமை எந்த ஒரு நிர்ப்பந்தமும் கொடுக்கவில்லை.
எனவே தமிழகத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பாமக நீடிப்பது குறித்து அனைத்து தோழமைக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னர், கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி முடிவு செய்வார் என்றார் ஜெயந்தி நடராஜன்.
முன்பு திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியபோதும் இதே போன்ற பிரச்சினைதான் ஏற்பட்டது. ஆனால் அப்போது மதிமுகவை மத்திய கூட்டணியிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என காங்கிரஸை திமுக வலியுறுத்தி வந்தது. இருப்பினும் அதுகுறித்து உடனடியாக முடிவு எடுக்காமல் மெளனம் காத்து வந்தது காங்கிரஸ். இதனால் அதிருப்தி அடைந்தது திமுக.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் கூட்டணியிலிருந்து மதிமுகவை நீக்கியது காங்கிரஸ். ஆனால் தற்போது பாமக விவகாரத்தில், கூட்டணியிலிருந்து நீக்க கோர மாட்டோம் என திமுக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.