'சிறுவன் வண்டி ஓட்டினால் அப்பாவின் லைசென்ஸ் ரத்து'
டெல்லி: இளம் சிறார்கள் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதைத் தடுக்க அதுபோல வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களின் தந்தைகளின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் சிறால் முன்னேற்றத் துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரேணுகா செளத்ரி பேசுகையில், 18 வயதுக்குட்பட்ட சிறார்ர்கள் வாகனங்களை ஓட்டுவதன் முலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்று வாகனங்களை ஓட்டி பிடிபடும் சிறார்களின் தந்தையரின் ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும். இதுகுறித்து போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதவுள்ளோம்.
சமீபத்தில் குர்கான் நெடுஞ்சாலையில், 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் 3 டீன் ஏஜ் வயதினரை காரில் ஏற்றிக்க கொண்டு வாகனத்தை ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
வாகனங்களை ஓட்டும்போது ஏற்படும் சிறு தவறுகளால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும், உயிரிழப்புகள் ஏற்படும் என்பது சிறுவர்களுக்குத் தெரியாது. எனவே இதுபோன்ற விபத்துக்களை ஏற்படுத்தும் சிறுவர்களைத் தண்டிப்பதற்குப் பதில் கவனக்குறைவாக இருக்கும் அவர்களின் பெற்றோர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உரிய சட்டத் திருத்தத்தை போக்குவரத்துத் துறை மேற்கொள்ள வேண்டும்.
தங்களது பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் உள்ளது. தங்களது பிள்ளைகள் வாகனங்களை ஓட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும் அவர்களுக்கு உள்ளது.
சிறுவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரிவதில்லை. எனவேதான் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவில்லை.
பள்ளிகளில் செல்போன்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கவே கூடாது. இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். செல்போன்களைப் பன்படுத்த வேண்டிய அவசியமே பள்ளி மாணவ, மாணவியருக்குக் கிடையாது என்பது எனது அசைக்க முடியாத கருத்தாகும்.
அதேபோல, கர்ப்பிணிப் பெண்களும் செல்போன்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது வயிற்றில் இருக்கும் சிசுக்களுக்கும் பேராபத்ைத ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நான் எதிரானவள் அல்ல. அதேசமயம், அந்தத் தொழில்நுட்பத்தை எந்தஅளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும். கர்ப்பிணிகள் செல்போன்களைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. இதில் அவர்களுக்குள்
சுய கட்டுப்பாடு உருவாக வேண்டும்.
நோய்டாவில் டாக்டர் ஒருவரின் மகளும், அவரது வீட்டு வேலைக்காரரும் கொல்லப்பட்ட சம்பவத்தை சிலர் திரைப்படமாக எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இது அந்தக் குடும்பத்தின் வலியை பெரிதுபடுத்தும். மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாவார்கள். இந்த விஷயத்தில் செய்தி, ஒலிபரப்புத்துறை தலையிட்டு தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார் ரேணுகா செளத்ரி.












Click it and Unblock the Notifications