சட்டத்திற்கு உட்பட்டு குரு மீது நடவடிக்கை: கருணாநிதி
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் காடுவெட்டி குரு மீது நடவடிக்கை எடுக்க கோரினால், அவர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. அவர்களிடம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பாமக நீக்க தீர்மானத்தைப் படித்துக் காட்டினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: ஜனவரி மாதம் நடைபெற்ற ஒரு பிரச்சனைக்கு இப்போது நடவடிக்கை எடுப்பது தேவையா?
கருணாநிதி: ஜனவரியில் கொலை நடந்தால் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியுமா? நடவடிக்கை எடுக்க மாட்டோமா?
கேள்வி: ஜி.கே.மணி உங்களைப் பார்த்ததாகவும் விளக்கம் கொடுத்ததாகவும் கூறப் படுகிறதே?
கருணாநிதி: அது தவறான செய்தி. அந்த குறுந்தகட்டை கடந்த 13ம் தேதியன்றுதான் நம்முடைய ஆற்காடு வீராசாமி அன்றைய தினம் திருமணத்திலே பேசிய பிறகு அதனை எனக்குக் காட்டிய பிறகுதான் அதைக் கேட்டேன். அதற்கு முன்பு அந்த வாசகங்களை நான் படித்தேன். சில வாரப் பத்திரிக்கைளில் வந்தது. அதைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது.
13-ம்தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பொருளாளர் ஆற்க்காட்டார் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் கொடுத்த சி.டி.யை பார்த்த பிறகுதான் அதில் உள்ள வாசகங்கள் தெரிய வந்தன.
கேள்வி: ஏற்கனவே நீங்கள் ஜி.கே.மணிக்கு அந்த சிடியைப் போட்டுக் காட்டியதாக சொல்கிறார்களே?
கருணாநிதி: இல்லை, கிடையாது. மணி அப்படி சொல்ல மாட்டார். அவர் பொய் சொல்லக் கூடியவர் அல்ல.
கேள்வி: டாக்டர் ராமதாஸுக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதியதாக பத்திரிகைகளுக்கு கொடுத்திருக்கிறாரே?
கருணாநிதி: ஆமாம், அந்தக் கடிதத்தை நீங்கள் படித்துப் பார்த்தால் நான் எவ்வளவு நாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி: ஏற்கனவே உங்களுக்கு தகவல் தெரிந்திருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் உள்ளதா?
கருணாநிதி: அதைப் பற்றி இல்லை. பொதுவாக அந்த மாவட்டத்தில் கலவரமாக இருக்கிறது. காவல்துறை அதிகாரி பற்றி புகார் சொல்லி அவரை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய பேச்சைக் கேட்டு உடனடியாக அந்த அதிகாரியை மாற்றினேன்.
கேள்வி: இரண்டு ஆண்டு திமுக ஆட்சி குறித்து ராமதாஸ் மார்க் போட்டுள்ளாரே? நீங்கள் அவருக்கு எவ்வளவு மார்க் போடுவீர்கள்?
கருணாநிதி: அந்தப் பரீட்சை பேப்பரையே படித்துப் பார்க்க விரும்பவில்லை. இப்போதும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில், மதிக்கிறேன்.
கேள்வி: ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை (மாவட்ட ஆட்சியர்) காடு வெட்டி குரு கேவலமாக பேசியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் உங்களிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா?
கருணாநிதி: ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த விஷயத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வார்களேயானால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications