காவல் நிலையத்தில் அத்துமீறிய மாஜிஸ்திரேட்!-விசாரணைக்கு உத்தரவு!!
மதுரை: காவல் நிலையத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்ட நீதிமன்ற ஊழியரை விடுவித்துச் சென்ற மாஜிஸ்திரேட் மீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியிடம், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிபதிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து கடந்த 7 ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது சொக்கிகுளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்குவது தொடர்பாக பங்க் ஊழியர்களுக்கும், நீதிமன்ற ஊழியர் நாகேந்திரன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த துணை ஆணையர் பிரபாகரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று நாகேந்திரனை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நாகேந்திரனை போலீஸார் அழைத்துச் சென்றது குறித்து நீதிமன்ற ஊழியர்கள், மதுரை குற்றவியல் 5 வது மாஜிஸ்திரேட் சாய் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டுகள் இளங்கோவன், சாய்சரவணன் ஆகியோர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, மாஜிஸ்திரேட் இளங்கோவன், நாகேந்திரனை ஜாமினில் விடுமாறு வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் போலீஸார் அவரை ஜாமினில் விட மறுத்துள்ளனர்.பின்னர் நாகேந்திரனிடம் எழுதி வாங்கி கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் துணை கமிஷினர் பிரபாகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர் மதுரை காவல்துறை ஆணையர் நந்தபாலனிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டின் செயல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்குலிக்கு புகார் அனுப்பினார் நந்தகோபாலன்.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து முழுமையாக விசாரித்து அளிக்குமாறு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications