மாஜிஸ்திரேட் மீது கல்வீச்சு-டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மாஜிஸ்திரேட் மீது நடந்த கல்வீச்சு சம்பவம் குறித்து டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கடந்த 23.05.08 அன்று அக்பர்அலி என்பவரது உறவினர் பாத்திமாவை சிலர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அப் பெண்ணை மீட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனை ஏற்க மறுத்து அங்கிருந்த பாத்திமாவின் உறவினர்கள் சிலர் மாஜிஸ்திரேட் மீது சரமாரியாக கற்களை வீசியுள்ளனர்.
இந்த சம்பம் குறித்து காவல் நிலையத்தில் வக்கீல் சங்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என வழக்கறிஞர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கறிஞர் சங்க தலைவர் செல்லதுரை மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மாஜிஸ்திரேட் மீது சரமாரியாக கற்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜோதிமணி இது தொடர்பாக டிஜிபி, ராமநாதபுரம் டிஐஜி, சிவகங்கை எஸ்பி, இளையான்குடி இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.