ஜெயலலிதாவுடன் ராமசாமி படையாச்சி மகன் சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மறைந்த ராமசாமி படையாச்சியின் மகனும், முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ் கொடநாடு எஸ்டேட்டில் சந்தித்துப் பேசினார்.
வன்னியர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் ராமசாமி படையாச்சி. வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் அவருக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் உண்டு. டாக்டர் ராமதாஸுக்கு முன்பாக வன்னியர்களின் தனிப் பெரும் தலைவராக திகழ்ந்தவர் படையாச்சி.
ராமசாமி படையாச்சியின் மகன் எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார். இவருடைய மகன் ராம்பிரசாத்துக்கும், விருகம்பாக்கம் வி.ஜி. பஞ்சாட்சரத்தின் மகள் மாலினிக்கும் வருகிற 22ந் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
திமுக அணியிலிருந்து பாமக விலக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக அணியில் பாமக இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில் ராமசாமி படையாச்சியின் மகன் ஜெயலலிதாவை சந்தித்துள்ளது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே பாமக தலைவர் ஜி.கே.மணி மகனுக்கும், திருவள்ளூர் மாவட்ட அதிமுக பிரமுகரின் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்தத் திருமணத்தில் டாக்டர் ராமதாஸும், ஜெயலலிதாவும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications