பாமக வருத்தம் தெரிவித்தால் கூட்டணியில் மீண்டும் இடம்: கருணாநிதி

திமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்க்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரி வருகிறார். இதுதொடர்பாக தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் விரிவாகப் பேசினேன். இரு கட்சிகளுக்கும் இடையே நல்லிணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில், தோழமைக் கட்சி அடிப்படையில், முன் முயற்சிகளை எடுத்தோம். முதல்வரை சந்தித்துப் பேசினோம்.
முதல்வர் அவர்கள் அவருடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். முதல்வரையும், மூத்த அமைச்சர்களையும் வன்னிய சங்க தலைவர் காடு வெட்டி குரு விமர்சித்துப் பேசியது வேதனைக்குரியது என்று முதல்வர் தெரிவித்தார்.
அதுதொடர்பாக பாமக குறைந்தபட்ச அளவில் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூட தயாராக இல்லை.
காடு வெட்டி குரு மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில், பாமகவை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றஅளவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனரிடமும் பேசவுள்ளோம். திமுககூட்டணி எந்த விதத்திலும், சிறிய அளவிலும் கூட பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கூட்டணியின் வலிமையைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு கட்சியின் கடமை ஆகும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications