பள்ளிகளில் கட்டாய நன்கொடை?-புகார் செய்வது எப்படி?
சென்னை: மாணவ, மாணவிகளுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பாடங்களை ஓராண்டுக்கு முன்பே நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அதன் இயக்குனர் வசுந்தரா தேவி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 2,074 அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளும், 1,545 அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. ஏராளமான மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் பெறாமலும், அனுமதியை புதுப்பிக்காமலும் செயல்படுகின்றன.
சென்னையில் மட்டும் 216 அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், 135 அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
அங்கீகாரம் பெற்ற அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக 2 வாரத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க முடியும்.
பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக பல மெட்ரிக் பள்ளிகளில் 10ம் வகுப்பு பாடத்தை 9ம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பாடத்தை 11ம் வகுப்பிலும் ஓராண்டுக்கு முன்பாகவே நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
அவ்வாறு முன்கூட்டியே பாடங்கள் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வசுந்தரா தேவி.
கட்டாய நன்கொடை-இயக்குனர் எச்சரிக்கை:
இதற்கிடையே மாணவ-மாணவிகளிடம் கட்டாய நன்கொடை வசூலிக்கும் அரசு பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல அரசு பள்ளிகளிலும் புதிதாக சேரும் மாணவ-மாணவிகளிடம் பெற்றோர்-ஆசிரியர் நிதி என்ற பெயரில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் குவிந்து வருகினிறன.
இதையடுத்து பெருமாள்சாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் பெருமாள்சாமி கூறியதாவது:
அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் நிதிக்காக ஒரு ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். அதுவும் மாணவர்களிடம் நேரடியாக வாங்கக்கூடாது. பெற்றோர்களிடம் தான் கேட்டு வாங்க வேண்டும்.
பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் மாணவ-மாணவிகளிடம் கட்டாயப்படுத்தி ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக் கூடாது.
கட்டாய நன்கொடை வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற கட்டாய நன்கொடை வாங்கிய குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரங்கநாயகி கிருஷ்ணகிரிக்கும், திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம் ராமநாதபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எந்த அரசு பள்ளியிலாவது கட்டாய நன்கொடை கேட்டால் பெற்றோர்கள் அதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடமோ (சி.இ.ஓ.), மாவட்ட கல்வி அதிகாரிகளிடமோ (டி.இ.ஓ.) அல்லது சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கோ புகார் செய்யலாம்.
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications